Thursday, August 23, 2012

உள்ளத்தின் ஓசை - 13 ( உறக்கம் )


மரணம் பற்றிய முந்தைய பதிவு நண்பர் பலருக்கும் படிக்கும் போது  பயத்தையும்   படித்து முடித்தபின் ஒரு தெளிவையும்   ஏற்படுத்தியதாக சொன்னார்கள் உள்ளூர மகிழ்ச்சி எனக்கு அதனால் மீண்டும் மரணத்தை பற்றி எழுதுகிறேன்

நாம் தினமும் மரணிக்கிறோம் என்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யபடுவீர்கள் ஆனால் அதுதான் உண்மை

மரணம் என்பது இன்னும் நம்மால் உணரமுடியாததாக நாம் உணர்கிறோம் அதை பற்றிய தவறான ஒரு எண்ணத்தை  பயத்தை நமக்குள் ஆரம்பம் முதல்  விதைத்துவிட்டார்கள் .

மரணம் என்பது அனைத்தையும் விடுவித்த ஒரு ஆழ்ந்த உறக்க நிலை

இந்த உறக்க  நிலையை நாம் தீர்மானிக்க முடியாது அது தானே நிகழும் அப்படி நிகழும் போது  அதை ஏற்றுக்கொண்டு அதனோடு நாம் ஐக்கியமாகும போது  அந்த சூழல் அழகாகிறது .

அந்த சூழலை நாம் மாற்ற முயலும் போது  அது விபரீதத்தில் முடிகிறது .

மரணம் என்பது இருப்பதை இழந்துவிட்டு புதிய வாழ்க்கைக்குள் புகுவது இதுவரையில் இருந்ததையெல்லாம் உதிர்த்துவிட்டு தன்னை புதுபித்துக் கொள்ள பழகி கொள்வது.

அது அவ்வளவு சுலபம் இல்லை  நமக்கு விருப்பமானதை இழப்பது என்பது சிரமமான ஒன்றாக இருக்கிறது.


எளிதில் கணித்துவிடமுடியாத மௌனத்தை போன்றது மரணம்
வெளிச்சத்தில் நம் செயல்களை திட்ட மிடுகிறோம் ஆனால் .இருளில் நம்மை நொடி பொழுதில் தழுவும் உறக்கத்தை நம்மால் திட்டமிட முடியாது.இதுதான் மரணம்.

அந்த இருண்மை  நம்மை இலகுவாக்கி பறக்க வைக்கிறது , ஒரு இறகை போல மிதக்கிறோம் உலகை துறக்கிறோம் எந்த வித எதிர்பார்ப்புகளும் ,கடமைகளும்  இல்லாமல். அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாய் நிற்கிறோம் .

இந்த நிலையை நாம் தினமும் அடைகிறோம் ஆனால் அந்த இருண்மை வியாகியதும்  விழிப்பு வந்ததும்  நாம் புதிதாய் பிறக்கிறோம் வெளிச்சத்தை எதிர்கொள்ள பல வேசங்களை கட்ட துணிகிறோம் .

ஆனால் இருளுக்கு வேஷம் தேவை இல்லை அது உண்மையான வெளிப்படையான அகநிலையை வரவேற்கிறது .

ஆகவே அந்த மரணம் நம்மை மலர செய்கிறது உள்நோக்கி நம்மை உற்றுநோக்க வைக்கிறது அதற்குள் நாம் காணாமல் போகிறோம் நம் கடந்த காலங்களை மறந்துபோகிறோம் .இதற்கான ஒத்திகைதான் உறக்கம் .

ஆகவே உறக்கத்தை வரவேற்கிறோம் பகலில் போடப்படும் வேசங்களை தூக்கி எறிய  காத்திருக்கிறோம் இரவை எதிர்பார்த்து இருக்கிறோம் . 

எனவே மரணம் அழகானது ,ஆச்சர்யமிக்கது , அற்புதமானது அதை வரவேற்ப்போம்


( ஓசை தொடரட்டும் )

Wednesday, August 22, 2012

உள்ளத்தின் ஓசை - 12 (ஈர்ப்பு )



நான் என்பதன் அர்த்தம் பரவி கிடக்கிறது இதில் எதை சரியாக பொருத்துவது என்பது நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது .

பொதுவாக நம்மை விட பிரபலாமான ஒரு நபரை பார்க்கும் போது நாமும் அவரை போல பிரபலமாக வேண்டும் என்று ஆசைபடுகிறோம் .

ஓர் ஆசையில் இருந்து இன்னொரு ஆசைக்கு செல்கிறோம் இது ஒரு நீருக்குள் ஏற்படும் சலன வட்டங்களை போல விரிந்துகொண்டே செல்கிறது.

ஆறுகள் கடலில் விழுந்து பெரிதாவதை போல நம் ஆசைகளும் , எண்ணங்களும் சங்கிலிப் பிணைப்புகளை விரிந்துகொண்டே போகின்றன. இது எப்போதாவது நின்று விடும் என்று எதிர்பார்த்துதான் ஆரமிக்கிறோம் . ஆனால் அது ஒருபோதும் நிற்பதில்லை.

இந்த ஆசை ஒரு வித ஈர்ப்பு அது யாரிடம் வேண்டுமானாலும் ஏற்படலாம் ,குடும்ப நண்பர்கள் , அறிமுகம் இல்லாத நபர்கள் என்று நம் காலத்தை இந்த மனிதர்களே ஆக்கிரமித்துகொல்கிரார்கள் . அதிக காலம் நாம் இவர்களுடனே நம் சக்தியை விரயமாக்குகிறோம் .

நாம் யாரிடம் பிடிப்பு வைத்திருகிரோமோ  அவர்கள் விலகும் போதெல்லாம் நாம் விக்கித்து நிற்கிறோம் ,சோர்ந்து துவண்டு போகிறோம் நம்மில் ஒரு பகுதி கரைவது போல உணர்கிறோம் .அதிலிருந்து மீண்டு வர இன்னும் பல காலங்களை செலவிடுகிறோம் .

அதனால்தான் நம்மால் அடுத்த கட்டங்களை பார்க்க முடிவதில்லை அதற்குள் நம் ஆயுள் முடிந்து விடுகிறது அதுவும் நிராசை என்ற மனநிலையோடு .

ஆகவே இந்த ஈர்ப்பை ஆசையை வெல்ல நாம் துணிய வேண்டும் எதுவும் நிரந்திரம் இல்லை .இன்று கிடைப்பது நாளை நிச்சயம் அதே சுவையுடன் இருக்காது என்ற மனநிலைக்கு நம்மை தயார்ப்டுதிகொள்ள வேண்டும் .

எதிர்வினைகளை ஏற்க்க முன்பே நாம் தயார் நிலையில் இருக்கும் போது அவை நம் கண் முன் ஒரு தூசி போல தெரியும் .அப்படி இருக்கையில் நம்மை எப்படி அது தாக்கும் ,நாம் ஏன் சோர்ந்து போக வேண்டும் .

இருக்கும் வரை இருக்கட்டும் போகும் போது போகட்டும் என்ற சமநிலைக்கு உங்கள் மனதை கொண்டு வாருங்கள் இது கடினம் இல்லை பழக பழக பாறையும் உருகும் ஆகையால் மனதை சமமாக நிலைகொள்ள முயலுங்கள் நிச்சயம் எந்த இடத்திலும் சறுக்காமல் நிற்கும் .


( ஓசை தொடரும் )

Tuesday, August 21, 2012

உள்ளத்தின் ஓசை - 11 ( அறிவு )

நாம் என்பது இங்கு அறிவைத்தான் முதன்மையாக பொருள் கொள்ளுகிறது 

அறிவு என்பது மூளையின் கட்டளைகளை உள்வாங்கி வெளியிடுவது

நிறைய விசயங்களை சேகரிப்பது என்றுதான் நாம் நினைத்துகொண்டு இருக்கிறோம் .

அறிவு மட்டுமே நிரந்திரம் அறிந்து கொள்வதோடு உலகம் முடிந்து விடுகிறது என்று நினைக்கிறோம் .

அதனால்தான் ஒரு புத்தகத்தில் இருந்து வேறு ஒரு புத்தகத்திற்கு தாவுகிறோம் ,ஒரு நூலகத்திலிருந்து வேறு ஒரு நூலகத்திற்கு தாவுகிறோம் .

ஏனென்றால் நாம் அறிந்து கொள்ள அறிந்துகொள்ள ,நமக்கு நிறையத் தெரியும் என்கிற எண்ணம் ஏற்படுகிறது .ஏதாவது தெரியாமல் விளிகின்றபோது அவமானபடுகிறோம். அந்த அவமானத்தை போக்குவதற்கு இன்னும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் .

'எனக்கு தெரியாது ' என்று சொல்வதர்க்க் கூச்சப்படுகிறோம் "எனக்கு எல்லாம் தெரியும் " என்று காட்டிக் கொண்டு பெருமைபடுகிறோம்.நம்மை நான்கு பேர் புத்திசாலி , அறிவாளி என்று சொல்லும்போது ,எதைப்பற்றியாவது பேசும்போது மற்றவர்கள் ஆர்வமாக பார்க்கும்போது நாம் சொல்வதைக் கேட்டு கைதட்டும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது .அதை தக்க வைத்துகொள்ள விரும்புகிறோம்.

அதன் காரணமாக மேலும் படிக்கிறோம் ,புத்தக புழுவாகவே மாறிவிடுகிறோம். எதை பார்த்தாலும் அலசி ஆராய முற்படுகிறோம் .மூளையின் மூலம் அனைத்தையும் அறிந்துவிடலாம் என்று திடமாக நம்புகிறோம்.அந்த இடத்தில்தான் நம் அறிவு நமக்கு எதிராக செயல்படுகிறது .

இவாறு அறிவை மட்டுமே ஆயுதமாக கொண்டு இருப்பவர்கள் அதற்க்கு அடுத்த நிலைக்கு செல்ல தயங்கும் போது அந்நிலையில் இருந்து கீழே வரும்போது அதை ஏற்றுகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் வாழ்வில் விரக்கிதியை அடைகிறார்கள் .

எப்போதுமே பாத்திரத்தை காட்டிலும் அதிலிருக்கிற பொருள் முக்கியமாக சொல்லபடுகிறது அப்படிதான் அறிவை முக்கியமாக நினைக்கிறோம் .

ஆனால் வாழ்கையை பொறுத்தவரை பாத்திரத்தின் உள்ளே இருப்பதைவிட பாத்திரத்தின் தன்மையை பொருத்து அதன் உள்ளிருக்கும் பொருள் தீர்மானிக்க படுகிறது .

ஒரு விதையை பூமிக்குள் விதைக்கும் போது சில சமயம் அழுகிவிடுகிறது .

அப்போது நிலம் முக்கியமாக இருக்கும். அப்படிதான் நாம் அறிவை மட்டுமே கொண்டு நம்மை தீர்மானிக்க முற்படுகிறோம் அது தவறு .

அதையும் தாண்டி அன்பு மனிதாபிமானம் கருணை காதல் நேசம் பாசம் இவைகளை கொண்டுதான் உலகம் மனிதனை எடைபோடுகிறது .

"அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு 
ஐயிந்து சால் பூன்றிய தூண்" 

வள்ளுவர் கூட அன்பு நாண் ஒப்புரவு கருணை வாய்மை,என்ற மேற்சொன்ன எல்லாவற்றையும் கொண்டதுதான் வாழ்க்கை என்னும் தூண் என்கிறார் .

ஆகவே ஒரு தூண் என்பது வெறும் மணலால் மட்டுமே கட்டமுடியாது ,சிமென்ட் ,ஜல்லி ,மணல்,நீர் கல் என அனைத்தும் சில அளவுகளில் கலந்து கட்டினால் மட்டுமே வலிமை மிக்க தூணாக இருக்கும்.


(ஓசை தொடரும் )

Saturday, August 18, 2012

உள்ளத்தின் ஓசை - 10 ( மரணம் )



நம்மை பற்றிய தேடலின் தொடக்கமாக பதற்றத்தை தொடர்ந்து நமக்குள் பயம்  ஆட்கொள்கிறது.
மரணத்தை பற்றிய பயம் !

மரணம் என்ற சொல்லே நமக்குள் பெரும் பயத்தை உருவாக்குகிறது 

"அடி வயிற்றில் அமிலம் சுரக்கிறது 
இதயத்தின் துடிப்பு அதீகரிகிறது 
வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே 
ஒரு உருளை உருண்டு தொண்டையை அடைத்துகொல்கிறது 
உடல் கொதிக்கிறது "

இந்த நிலை காதலுக்கு மட்டும் இல்லை மரணத்திற்கும்  உருவாகிறது. 

மரணத்தை பற்றி உங்களிடம் ஒரு விளக்கம் சொல்லுகிறேன் 

அதாவது என்றாவது ஒருநாள் நாம் இல்லாமல் போய்விடுவோம் என்ற நினைப்பு நம்மை பயங்கரமாக பயமுறுத்துகிறது .

அதை பேசவே பயபடுகிறோம் ...அப்படி ஓன்று நிச்சயம் நடக்கும் என்று அறிந்த பின்னும் ஏதாவது ஒன்றிக்கு நம் பெயரை சூட்டி நமக்கு பின்னும் நாம் வாழ வழி செய்கிறோம் .

இந்த மரண பயத்தில் இருந்து  நம்மை விடுவிக்க  சமூகம் செய்த தந்திரம் தான்  புறதேடல்கள்.

புறதேடல்களில் சின்ன சின்ன சந்தோசங்களில் மனம் துள்ளி குதிக்கிறது அதில் மனதை  நிறைத்துகொள்கிறோம்   மரணத்தின் பயத்தை உள்ளே வரவிடாமல் செய்கிறோம் .

மது ,மாது , காதல் என்று ஏதாவதொரு மகிழ்ச்சி தரும் செய்கைகளை தொடர்ந்து செய்ய தன்னை  நிறைத்துகொள்ள  முற்படுகிறோம் 

"வெளியே தேடு -உலகத்தை அறிந்து கொள் 
உள்ளே தேடு - உன்னை அறிந்துகொள் "

இந்த வார்த்தைகளை உணருங்கள் தன்னை சரியாக புரிந்துகொள்ளாதவன் வேறு ஒன்றரை எப்படி புரிந்துகொள்வான் . தன் கைகளின் நீளம் உணராதவன் பிற பொருள்களின் நீளத்தை எப்படி அளவிடுவான்.நம்மில் பலர் இப்படிதான் இருக்கிறோம் .

வெளியே கொட்டி கிடக்கிற அதிசயங்களை காட்டிலும் உள்ளே நிறைந்திருக்கிற அபூர்வங்கள் அதிகம் .

விரதம் இருப்பவர்களை நான் கவனித்து இருக்கிறேன் உடலை வருத்தி கொள்வது வாழ்வில் ஏதேனும் அடைந்து விட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் தான் அது இறைமை இல்லை அவர்கள் எண்ணம் முழுதும் எப்போது விரதம் முடியும் ? எப்போது உணவு நேரம் வரும் என்றே தியானிகிறார்கள். ஆகவே இந்த எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தேடுதலை பற்றிதான் நான் சொல்ல வருகிறேன் 

தேடுதல் என்பது இழப்பு .........நம்மை இழப்பது 

"நான்" என்கிற நம்மை இழப்பது 

நமக்குள் நிறைந்து  இருக்கிற சமூகம் திணித்து இருக்கிற குப்பைகளை எல்லாம் தூக்கி எரிந்து விட்டு கனமின்றி ,வெறுமையாய் நிற்பது .

அந்த நொடி நாம் இலகுவாகிவிடுவோம் காற்றோடு கலந்து நிற்போம் அதுதான் உன்னதம் .

அதை பெறுவது சுலபம் இல்லை நமக்குள் இருப்பதை தொலைப்பது  ,நாம் அறிந்ததை மறப்பது என்பது ஒரு தியானம் அந்த தியானத்தை அடையும் போது ஞானத்தை பெறுவோம் அந்த ஞானம் இந்த உலகில் இருந்து தள்ளிநின்று உலகை பார்க்க செய்யும் அதற்கு நாம் செய்வது தேடாமல் இருப்பது .

தேடாதிருக்கும் நிலையை தேட முற்படும்போது தேடியது எல்லாம் கிடைகிறது !.
எனவே தேடுவது என்பது தேடாமல் இருப்பது 

( என்ன நண்பர்களே என் எண்ணத்தின் வெளிபாடு உங்களுக்கு புரிகிறதா ? ஆழ்ந்து யோசியுங்கள் நிச்சயம் புரியும் நான் என்பது முற்று பெறுகிறது )


( ஓசை தொடரும் )

Friday, August 17, 2012

உள்ளத்தின் ஓசை - 9 ( பதற்றம் )



நான் யார் என்று கடந்த பகுதியில் எழுப்பிய வினாவிற்கு சில நண்பர்கள் விடைகளை சொல்லிச் சென்றனர் .

ஆனாலும் நிறைவு பெறவில்லை நான் என்பதின் அர்த்தம் ....

வாழ்வின் ரகசியத்தின் தேடல் இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது .நமக்கு உள்ளே தேடுவதை விட நமக்கு வெளியே தேடுவது சுலபமாக இருப்பதால் வெளியே தேடுகிறோம் நாம் நாமாக இருப்பதில் நமக்கு உடன்பாடில்லை 

உலகில் உயர்ந்த ஒன்றோடு நம்மை ஒப்பிட்டு பார்ப்பதே நம் தேடலின் வேலையாகிபோனது .நம்மை எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்கிற ஆசை. நம்மை முழுதாக நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அக்கறை நமக்கு இல்லை , பிறர் நம்மை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற ஆவல் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கிறது 

ஒரு மனிதர் எப்போதும் எதையாவது சேகரிப்பதிலே தன் நேரத்தை தொலைப்பார் .கூடு விட்டு கூடு பாய்வது போல பொருள் விட்டு பொருள் பாய்ந்து அவரின் சேகரிப்பு தொடர்ந்தது .வேறு ஒரு புதிய பொருளை பார்கையில் அதுவரை சேகரித்த பொருள்கள் அவருக்கு அபத்தமாய் படும் .

இறுதியாய் ஒரு நாள் அவரை  சந்தித்த அவரின் நண்பர் அவரின் இல்லம் முழுவதும் ஒரு ஞானியின் படத்தை கண்டார் " இப்பொழுது என்ன சேகரிக்கிறீர்கள்  என்று நண்பரிடம் கேட்டார் "எல்லாவற்றையும் நிறுத்திவிட்டேன் இவர் சொல்லித்தான் என்று ஞானியின் படத்தை பார்த்து சொன்னார் ....இப்பொழுது அவரின் புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் சேகரிப்பது தொடர்ந்துகொண்டு இருக்கிறது .

இப்படிதான் நாம் ஒரு பொருளை தேடுகையில் வேறு ஒரு பொருள் கிடைகிறது இன்னொரு பொருளை தேடுகையில் பிறிதொரு பொருள் கிடைகிறது .

நாம் எதை தேடுகிறோமோ அதற்கான பிரயதங்களை நிறுத்தும் போது அந்த பொருள் விழிகளுக்குள் தட்டுபடுகிறது இந்த அனுபவம் நம் எல்லோருக்கும் நடத்திருக்கும் .

பொருள் அந்த இடத்திலேதான் இருக்கிறது 

விழிகளும் இடம்பெயரவில்லை 

ஆனாலும் தேடல் சிரமமாயிருகிறது காரணம் பதற்றம் தான்.

இந்த பதற்றத்தை உற்றுநோக்கினால் அது 'பேராசை ' என தோன்றும் 

பதற்றம்  புலன்களை மழுங்கடித்துவிடுகிறது பல வியாதிகளை உருவாக்கி விடுகிறது .நமக்கு நாமே ஏற்படுத்திகொள்ளும் 'வன்முறை' என்றே சொல்லலாம் அப்போது நம் கண்கள் மறைக்கபடுகிறது , உடல் கொதிக்கிறது , மனம் களைத்துபோகிறது இதற்கு காரணம் தேடலில் மெல்லிய இழையை போல ஆசை ஒட்டிகொண்டிருப்பதுதான். 

'இது மட்டும் கிடைத்து விட்டால் 'என்று  நம் மனதில் எழுகிற கற்பனைகள் நம் பதற்றத்தை அதிகரிக்க செய்கிறது .

அதை போக்க என்ன செய்யாலாம் ? 

(ஓசை தொடரும் ) 

Thursday, August 16, 2012

உள்ளத்தின் ஓசை - 8 (நான் யார் ?)


நான் என்பது யார் ? 
எப்போது உருவானது இந்த நான் என்று என்னை கேட்டுகொண்டிருக்கும் போது உதிர்த்த விடைகளும் வினாக்களும் என்னையே திகைக்க வைக்கிறது சில நொடிகளில் .

ஏனென்றால் பெரும்பாலும் நான் என்பது என் பெயராலே அடையாளபடுத்தபடுகிறது அப்படிஎன்றால் வெறும் குறியீடுதான் நானா ? என் பெயரை தெரிந்த அளவில் மட்டுமே என்னை தெரியும் என் பெயர் தெரியாத அளவில் நான் எப்படி நானாக முடியும் ?

வயதை வைத்து சொல்லலாம் என்றால் அது மாற்றத்திற்குரியது ..பதவி என்று எடுத்துகொண்டால் அது நிரந்திரமில்லாதது கல்வித்தகுதியை சொன்னால் அது நானாக உருவாக்கிகொண்டது ...

என் உருவம் மாற்றதிற்குரியதாக இருக்கிறது பரிணாமத்தின் கைகளில் சிக்கிய கல்லை போல ஒவ்வொரு காலகட்டங்களிலும் என் வளர்ச்சியில் உருவத்தில் மாறுதல் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது என் இளமை என்னை மயக்கவும் செய்கிறது அதே சமயம் பயன்கொள்ளவும் செய்கிறது .........

நேற்று இருந்தது இன்று இல்லை இன்று என்பதும் நிரந்திரம் இல்லை ..நாளை என்பது நிச்சயமற்ற நிலையில் நான் என்பதை எதுவாக கொள்ளமுடியும் 

இந்த சிந்தனையை தகர்த்தது ஒரு ஞானியின் தத்துவம் வார்த்தைகள் ..

ஒரு பெண்மணி இறந்துபோன தன் கணவனை எழுப்பி உயிருடன் தருமாறு வேண்டுகிறாள் அந்த ஞானியிடம் அதற்க்கு அவர் " எந்த கணவனை ? என்று கேட்ட கேள்வியில் அந்த பெண்மணி உறைந்து போகிறாள் ! மீண்டும் கேட்கிறார் " உனக்கு எந்த கணவன் வேண்டும் கல்யாணத்திற்கு முன் பார்த்த கணவனா? அதற்க்கு பின் பார்த்த கணவனா ? வாலிபனாக இருந்த கணவனா ? இறப்பிற்கு முன் பார்த்த கணவனா ? எந்த கணவன் ?என்று கேட்கிறார் ?

சரியாக அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள் பல கணவன் இல்லை ஒரே கணவனின் பரிணாமத்தின் காலன்களை கணக்கிட்டு அவர் கூறுகிறார் .அந்த பெண்மணி குழம்பி போகிறாள் அதன் பின் அவர் கூறுகிறார் "பிறப்பைபோல இறப்பும் இயற்கைதான் அதை மீண்டும் பெற நினைப்பது அறிவீனம் என்கிறார். 

இதை ஏன் சொல்கிறேன் என்றால் நான் என்பது பரிணாமத்தின் வளர்ச்சி மரணத்தின் நகர்தல் என்னுடைய வளர்ச்சி என்பது நான் மரணத்தை அணுக என்னை தயார் படுத்துகிறேன் என்று அர்த்தம் .......

இன்னும் ஒரு விளக்கம் சொல்கிறேன் 

ஒருவர் விபத்தில் இறந்துவிட்டால் நாம் வருத்தபடுகிறோம் நோய்வாய்பட்டு இறந்திருந்தால் கூட பரவாயில்லை இப்படி திடிரென்று இறந்துவிட்டாரே .....என்று மனம் புலம்புகிறது ஏன் தெரியுமா அது இறந்தவருக்கான அனுதாபம் இல்லை . நம்மை அவருடைய மரணத்திற்கு தயாற்படுதிகொல்வதற்கான உபாயம் .

கொஞ்சம் கொஞ்சமாக நம் மனம் சகஜ நிலைக்கு வந்துவிட்டால் மரணத்தை ஜீரனித்துகொண்டது என்று அர்த்தம் .

அப்போது நான் என்பது என்ன ? வினாவிற்கான உங்களின் விடைகளை என்னிடம் கொட்டி செல்லுங்கள் 


(ஓசை தொடரும் )

Monday, August 13, 2012

உள்ளத்தின் ஓசை - 7 (புதிதாக்குதல் )



மனித மனம் எப்போதும் மாற்றத்தை விரும்புகிறது என்று நமக்கு தெரியும் ஆனால் அந்த மாற்றம் ஆரோக்கியமாக இருக்க 
சில வழிமுறைகளை நான் சொல்ல விழைகிறேன்.

ஒரு ஓவியத்தை வாங்குகிறோம் அதை அறையின் முகப்பில் வைத்து ரசிக்கிறோம் சில நாள் கழித்து அந்த ஓவியம் கவனிப்பாரற்று சுவற்றின் ஒரு பாதியாகவே மாறிவிடுகிறது அவை நம்மை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை .

அப்படிதான் மனிதர்களும் புதிதாக பார்க்கும் போது ஒரு ஆர்வம் ஈர்ப்பு ஏற்பட்டு சந்தோத்தில் சிலாகிப்போம் கைகள் இடைவெளியில் காற்று நுழையா வண்ணம் பிணைந்து இருக்கிறோம் .ஒரு சில நாட்களிலே ஒரு தாவரத்தை போல உருமாரிவிடுகிறோம் உணவும், உறைவிடமும் கடமையும் மட்டுமே கண்முன் வருகிறது . தினசரி வேளைகளில் நம்மை  திணித்துகொள்கிறோம் அதன் பின் அந்த ஈர்ப்பு நம்மை ஒன்றும் செய்வதில்லை .

ஆனால் அப்படி இருக்க கூடாது ஒவ்வொரு நாளும் புதிதாய் மாறவேண்டும் அகமும் புறமும் புதிதாக மாற்றப்பட்டு நம்மை நாம் ஈர்க்கனும் அப்பொழுதான் எதிரே இருப்பவர் எப்போதும் கைகோர்த்து நடப்பார் நம்முடன். இங்கு எதிரே இருப்பவர்  நம் மனதிற்கு பிடித்தவர் .

எந்த நேரமும் எதையாவது செய்ய வேண்டும் என்று திட்டம் போடும் மனிதனின் மனம் ஒரு கிடங்கு போல இருக்கு பல சுமைகளை சுமந்துகொண்டு அழுக்கேறி வெளிச்சம் குறைந்து ஒரு சூனியத்தின் கரங்களை போல இருக்கிறது .

இதற்க்கு நேர் மாறாக பெயரும் புகழும் வேண்டி கதவை அகல திறந்து வைக்கிறார்கள் சிலர் அவ்வாறு திறந்து வைக்கும் போது  புகழுடன் சேர்ந்து அவப்பெயர்களும் நிறைய வந்து விழுகிறது .

இப்படி அல்லது அப்படி என்று இல்லாமல் மனதை சமநிலையில்  ஒரு கண்ணாடியை போல வையுங்கள் .

கண்ணாடி யாருடைய உருவத்தையும் தக்கவைத்து கொள்வதில்லை அப்படி தக்கவைத்துகொண்டால் அது புகைபடமாகிறது .

ஆகவே தினமும் ஒரு புதிய மனுசியாக உருமாறுங்கள்  அப்போது உலகம் உங்களை உற்று நோக்கும். 

இருக்கிறோம் என்பதை அடிகடி நினைவு படுத்த தவறினால் இறந்தவர்கள் வரிசையில் இணைக்கபட்டுவிடும்வோம் .


( ஓசை தொடரும் )

Monday, August 6, 2012

உள்ளத்தின் ஓசை - 6 ( கதவைத் திற )





மூங்கில்களை பார்க்கும் போது வெறும் மூங்கிலாக பார்க்க முடிவதில்லை 
துளைகள் இடபடாத ஒரு புல்லாங்குழல் போலதான் பார்க்க முடிகிறது .........

ஆனாலும் துளைகள் இல்லாததால் அவைகள் காற்றின் வருகையை எதிர்நோக்காமல் சிறகை  விரிக்காமலே  சிதைவுறுகிறது ....

மூங்கிலில் துளைகள் இல்லாததால் அதை வாசிப்பது சிரமம்  சாத்தியமும்  இல்லை , இதைப்போலத்தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள் இறுகிய இதயங்களுடன் கெட்டித்து  இரும்பு போல ,இவர்கள் ஒரு போதும் இலகாதவாறு பார்த்துகொல்கிரார்கள் ஒரு இயந்திரத்தை போல .

மூங்கில் புல்லாகுழல் ஆக வேண்டுமானால் நிச்சயம் துளைகளிட சம்மதிக்க  வேண்டும் . அவ்வாறு துளையிடும் போது ஏற்படும் சில வலிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். சிலவற்றை  இழக்கத்  தயாராக வேண்டும் .

ஆனால் அந்த வலிகளை போக்கும் மகத்துவம் விரைவில் கிடைக்கும் ஒரு காற்று உள் நுழையும் போது இந்த பிரபஞ்சந்தையே உள் நுழைத்து இசையாய் பரிணமித்து அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொள்ளும் போது இழப்புகள் ஈடுசெய்யப்படும் , வலிகள் துடைக்கப்படும் .

புழு பட்டாம்பூச்சியாக உருமாறி வண்ணங்களோடு சிறகு விரித்து பறப்பது போல காற்று உள் நுழைந்து இசையாகி இறக்கை விரித்து பறக்கிறது . 

மனிதனும் இதற்க்கு தயாராக வேண்டும் .ஆனால் அவன் எப்போதும் தன கதவுகளையும் ஜன்னல்களையும் மூடியே வைத்திருக்கிறான் எங்கே களவு போய்விடுமோ என்று அச்சப்பட்டு தன சாளரங்களை எல்லாம் மூடி வைக்கிறான் அவனுக்குள் இருக்கும் பாதுகாப்பின்மை அவனை அடைத்து வைக்கவே வற்புறுத்துகிறது.

திருடர்களுக்கு பயந்து, கொசுக்களுக்கு பயந்து , சில கதவுகள் மூட படுகிறது ஆனால் பெரும் பான்மையான கதவுகள் சமூகத்தின் வரையறைகளுக்கு பயந்து மூடப்பட்டு உள்ளே அந்த மரபு வரையறைகளை தகர்த்து எரிந்து கொண்டிருகிறது.

கண்களுக்கு கடிவாளம் பூட்டியும் ,காதுகளுக்கு மூடிபோட்டும் நடப்பவர்களுக்கு உள்ளூர பயம், கண்களின் வழியாக , காதுகளின் வழியாக ஏதேனும் இதயத்திற்குள் நுழைந்து கருணைக் கசிவையும் , காதல் பிரளயத்தையும் ஏற்படுத்தி விடுமோ என்று அதனால்தான் கண்களை இமைகள் என்னும் மூடி கொண்டு மூடிக்கொள்கிறார்கள் 

ஆனால் இப்படி அடைத்து வைக்கும் பொழுது அதன் வெப்பத்தில் அவர்களின் ஆசைகள் ஆயிரம் குஞ்சிகளை பொறித்து சிறகு விரித்து பறக்க விடும் என்பதை அறிவதில்லை அவர்கள். அதன் இனப்பெருக்கம் காற்று வெளிகளில் நடைபெறுவதை விட பல மடங்காகும் என்பதையும் அறிய மாட்டார்கள் .

ஆகவே கதவை திறங்கள்-கண்களை திறங்கள் காற்றை - காட்சிகளை உள்ளே வர அனுமதியுங்கள் அவை உங்களுக்குள் புது உணர்வுகளோடு இசையை உருவாக்கும் அவற்றின் அதிர்வுகள் உங்களின் அசுத்தங்களை சுத்தமாக்கும் .

மலர்களின் நறுமணத்தை துவாரங்களின் படிய வைக்கும் ஒரு தாயை போல நம்மை தாலாட்டும் உறவுகளை நட்புகளை கைகோர்த்து நடை பயிலுங்கள் 

சிந்தனைகளை பரிமாறுங்கள் ,
அன்பை அடைமழை போல பொழியுங்கள் 
கோபத்தை சிக்கனமாய் செலவிடுங்கள் .
பண்பற்ற உள்ளம் வளர்வதை காண்பீர்கள் .....

கடல் போல அன்பை பெற 
உளியின் வலி தாங்க தயாராகுங்கள் ....

( ஓசை தொடரும் )

Thursday, August 2, 2012

வெண்ணை பிறந்த விதம்


வெண்ணையில் ஒளிந்திருக்கும் ரகசியங்கள் 

வெண்ணை பற்றி ஒரு முன்னோட்டம் , 
கண்ணனுக்கு பிடித்தது, 
ஆஞ்சநேயருக்கு சாத்துவது ,
வயிற்று புன்னை ஆற்றும்  மருத்துவம் கொண்டது 
வெள்ளையும் மஞ்சளும்  கலந்த தங்க நிறத்தில் இருக்கும் 

பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து தயிராக்க வேண்டும் பின் அந்த தயிரய் 
கடைந்தால் நமக்கு வெண்ணை கிடைக்கும் என்பது பொதுவாக நாம் அறிந்த 
விசயங்கள் ஆனால் அந்த பால் தயிரான பின் அதை கடைந்து வெண்ணை 
ஆகுவதற்கு முன் சில முக்கிய விசயங்களை நாம் உற்று நோக்க வேண்டியிருகிறது.

தயிர் கடையும் நேரம் 
எல்லா நேரங்களிலும் தயிராய் கடைந்தால் வெண்ணை கிடைபதில்லை 
பிரம்ம முகூர்த்தத்தில் கடைந்தால் மட்டுமே வெண்ணை கிடைக்கும் 
இதை நாம் சங்க இலக்கியங்கள் நமக்கு எடுதுரைகின்றன

வைகறை பொழுதில் ஆய்ச்சியர் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவர். 
இரவு இருள் புலர்ந்து விடியற்காலையின் ஆரம்பத்தில் மகளிர் விளாம்பழத்தின் 
மணம் கொண்ட பானையின் கண் வெண்ணை பெரும் பொருட்டு மத்தினால் 
தயிர் கடைவர் இதை கயமனார் என்னும் புலவர் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

"விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசந்த தின்ற தெயகால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளி முதல் முழங்கும்
வைபுலர் விடியல்" ( நற்றிணை : 12:1 -4 )

இதன் மூலம் சுடு மண் பானைகளில் வெண்ணை கடைந்தால் கடைந்தால் விளாம்பழ வாசம் வரும் என்பதை அறிய முடிகிறது 

மேலும் மண்ணால் செய்து சுடபட்ட குடத்தில் உள்ள தயிரை வெயில் வெம்மை விலகும் பொழுதில்  கடைந்தால்  திரளாது. வெயிலின் வெம்மை இல்லாத அதிகாலையில் கடைந்தால் வெண்ணை திரளும் என்கிற மாபெரும் உண்மையை நற்றினை பாடல் வழி காண முடிகிறது. 

" சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற 
பிறவா வெண்ணை " (நற்றிணை - 84: 6-7) 

என்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ , இந்த காரணத்தினை நன்கு உணர்ந்த ஆய்ச்சியர் அதிகாலையில் மத்தின் ஓலி தெறிக்க தயிர் கடைகிறார்கள் இதை " மத்து ரரியமனை " என்று 
பதிற்று பத்து குறிப்பிடுகிறது. ஆயர் மகளிர் கடைந்த அந்த தயிரில் நுரையாய் மிதக்கும் வெண்ணையின் அழகை கூட பாலைகொத்தனர் அகநானூற்று பாடலில் அழகாக குறிப்பிடுகிறார். 

" பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு" ( அகநானூறு :224:6) 

 இந்த விசங்களை பார்கையில் நம் முன்னோர்களின் திறமைகளையும் இயற்கையோடு  அவர்கள் இயைந்து வாழ்ந்ததையும் அறிய முடிகிறது. 

நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் அனைத்து பொருட்களிலும் ஒரு மருத்துவ குணம் இருப்பதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்திருகிறார்கள் ,அதை எந்த முறையில் உன்ன வேண்டும் எந்த நேரத்தில் உன்ன வேண்டும் அதன் அளவு எவ்வளவு? என்றெல்லாம் பெரும் ஆராய்ச்சிக்கு பின்பு நமக்கு அறிவுறுத்தி சென்று இருக்கிறார்கள் .

அவர்கள் கண்டு பிடித்ததை சரியாக உபோயோகிக்க நம்மை விட வேற்று நாட்டவர்தான் ஆர்வம் கொள்கிறார்கள் ..

அருகில் இருப்பதை எப்போதும் நாம் அறிவதில்லை தொலைவில் இருப்பதை தேடுவதிலேயே தொலைத்து  கொண்டு இருக்கிறோம் நம் நேரங்களை.

இனியாவது அருகில்  இருப்பதை அலட்சியமாய் பார்க்காமல் ஆச்சர்யமாய் பார்க்கலாம் .